தூத்துக்குடி – டிச -19,2022
Newz – webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள காவல்துறையினருக்கு பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடை பெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல்துறையினர் இதற்கு முன்பு பணியாற்றிய காவல் நிலையங்களில் அவர்கள் செய்த பணியின் அடிப்படையிலும், இதற்கு முன்பு அவர்கள் எந்தெந்த காவல் நிலையங்களில் பணியாற்றியுள்ளனர் என்பதன் அடிப்படையிலும் இன்று சம்மந்தப்பட்ட காவல்துறையினர் அனைவரையும் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு அழைத்து, அவர்களிடம் நேரடியாக கேட்டு, காவல் நிலையங்களில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப விருப்பப்பட்ட இடங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று பொதுமாறுதல் வழங்கினார்.
தூத்துக்குடி நகரம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய உட்கோட்ட காவல் நிலையங்களில் 3 ஆண்டுகள் பணி முடித்த இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரையுள்ளவர்கள் மற்றும் விருப்பத்தின்பேரில் பணி மாறுதல் கேட்டிருந்தவர்கள் என 271 பேர் கொண்ட பொதுமாறுதல் பட்டியல் தயார் செய்யப்பட்டு இன்று முதல் கட்டமாக கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் (பொறுப்பு) பொன்னரசு, திருச்செந்தூர் ஆவுடையப்பன், ஸ்ரீவைகுண்டம் மாயவன், சாத்தான்குளம் அருள், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, மாவட்ட காவல் அமைச்சு பணி நிர்வாக அதிகாரி குமார், அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரியப்பன், செல்வக்குமார் உள்ளிட்ட உதவியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் முன்பு நடைபெற்றது. இக்குழுவின் மூலம் காவல்துறையினரின் விருப்பங்களை நேரடியாக கேட்டறிந்து காவல் நிலையங்களில் ஏற்கனவே காலிப்பணியிடங்கள் மற்றும் தற்போது மாறுதலாகி செல்லும் காலிப்பணியிடங்களையும் கணக்கிட்டு அவர்களின் விருப்பத்திற்கேற்ப பணி மாறுதல் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்; உத்தரவிட்டுள்ளார்.