திருநெல்வேலி – டிச -13,2021
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி, மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மாவட்டத்தில் காணாமல் போன 10 லட்சத்தி 46 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 70 செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரித நடவடிக்கை. மேலும் இயற்கை சூழ்நிலையை பாதுகாக்க மரக்கன்றுகள் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப உத்தரவுபடி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு, தலைமையிலான சைபர்கிரைம் போலீஸார், மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் ராஜ், உதவி ஆய்வாளர் . ராஜரத்தினம், ஆகியோர் அடங்கிய சைபர் கிரைம் காவல்துறையினர் காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு ரூபாய் 10 லட்சத்தி 46 ஆயிரத்து 500 மதிப்புள்ள 70 செல்போன்களை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து,செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை, உரிய நபர்களிடம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், இ.கா.ப ஒப்படைத்தார்
பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் இதுவரை மாவட்ட சைபர்கிரைம் காவல்துறையினர் 50 லட்சத்து 21 ஆயிரத்து 235 மதிப்புள்ள 315 செல்போன்களை மீட்டுள்ளனர். இதுவரை மீட்கப்பட்ட செல்போன்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் இணையம் மூலம் வேலை வாங்கித் தருவதாகவும், பரிசு விழுந்திருப்பதாக மற்றும் OTP பெற்றுக்கொண்டு பண மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகார்களுக்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு ஏமாற்றியவர்களின் வங்கிக் கணக்கை முடக்கி 1 இலட்சத்தி 77ஆயிரத்து 177 ரூபாய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு திரும்ப பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் மோசடி செய்யப்பட்ட பணங்களில் 5 லட்சத்தி 36 ஆயிரத்து 754 ரூபாய் வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார் மேலும் இக்காலகட்டத்தில் இணையவழி மூலம் பணபரிவர்த்தனை மிகவும் இன்றியமையாததாக உள்ளது எனவும் எனவே பொதுமக்கள் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது கவனமுடன் இருக்க வேண்டும் எனவும், செல்போனிற்கு வரும் OTP எண்களை பகிர வேண்டாம் எனவும் இணைய வழி குற்றங்கள் தொடர்பாக 155260 தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , செல்போன் தொலைத்த நபர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி அவற்றை நல்ல முறையில் பேணி வளர்க்கும் படி அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு, மாவட்ட சைபர் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ராஜ், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ராஜேஷ், சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் ராஜரத்தினம், மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.