சென்னை – அக் – 28,2021
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு அமைந்தகரை அண்ணா வளைவு அருகே சென்னை பெருநகர மேற்கு மண்டல போக்குவரத்து காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் “அக்டோபர்-21” அன்று இந்தியா முழுவதும் பணியின்போது இறந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்காக “காவலர் வீர வணக்க நாள்“ அனுசரிக்கப்படுகிறது. அதன்பேரில், கடந்த 21.10.2021 அன்று தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில், காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு, பணியின்போது இறந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து, மௌன அஞ்சலி செலுத்தி, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.
காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவிட்டதன்பேரில், 21.10.2021 முதல் 31.10.2021 வரையிலான 11 நாட்கள் “காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரமாக” (Police Commemoration Awareness Week) கடைபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை, அமைந்தகரை, அண்ணா வளைவு அருகே காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல், மேற்கு மண்டல போக்குவரத்து காவல் துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., துவக்கி வைத்தார். பின்னர் கொரோனா பேரிடர் காலத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுத்து, பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இறந்து போன போக்குவரத்து காவல் ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு காவல் ஆணையாளர் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, போக்குவரத்து காவல் ஆளிநர்களின் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார். அண்ணா வளைவு முதல் அண்ணாநகர் காவல் நிலையம் வரையிலான சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் சுமார் 100 போக்குவரத்து காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். மேலும், காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பேரிடரின் போது இறந்த காவல் ஆளிநர்களின் நினைவாக மரக்கன்றினை நட்டார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் .லோகநாதன், இ.கா.ப., போக்குவரத்து இணை ஆணையாளர் (வடக்கு) லலிதா லஷ்மி, இ.கா.ப., துணை ஆணையாளர்கள் மருத்துவர் தீபா கனிகர், இ.கா.ப., (அண்ணாநகர்), அசோக்குமார் (போக்குவரத்து/மேற்கு), சுரேந்திரநாத் (போக்குவரத்து/ திட்டமிடல்). காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.