தூத்துக்குடி – அக் -24,2021
காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21ம் தேதி ‘காவலர் வீர வணக்க நாள்” உறுதிமொழி ஏற்று மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது, இதனை முன்னிட்டு ஆண் மற்றும் பெண்களுக்கான குறுந்தொடரோட்ட போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தருவை மைதானத்தில் இன்று கொடியசைத்து துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 600 மாணவர்கள் 7 கி.மீ தூர குறுந்தொடரோட்டப்போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தூத்துக்குடி தருவை மைதானத்திலிருந்து புறப்பட்டு ரோச் பூங்கா வழியாக தெர்மல் நகர் மற்றும் புதியதுறைமுகம் விலக்கு வரை சென்று திரும்பி மீண்டும் ரோச் பூங்கா வந்தடைந்தனர்.
அதே போன்று பெண்கள் பிரிவில் 200 மாணவிகள் 5 கி.மீ தூர குறுந்தொரோட்டப்போட்டியில் கலந்து கொண்டு தூத்துக்குடி தருவை மைதானத்திலிருந்து புறப்பட்டு ரோச் பூங்கா வழியாக ரெயில்வே பாதை அருகில் உள்ள உப்புத்தொழிற்சாலை வரை சென்று திரும்பி மீண்டும் ரோச் பூங்கா வந்தடைந்தனர்.
இதில் ஆண்களுக்கான தொடரோட்ட போட்டியில் வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லுரி மாணவர் பசுபதி முதலிடத்தையும், சென்னை லயோலா கல்லூரி மாணவர் அஜித் 2வது இடத்தையும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரி மாணவர் நவீன்பிரபு 3வது இடத்தையும், அதே போன்று பெண்களுக்கான தொடரோட்டப் போட்டியில் புதூர் நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலா முதலிடத்தையும், விளாத்திக்குளம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவி ராதிகா 2வது இடத்தையும், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி ஜெயமாலினி 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலா முறையே முதல் பரிசாக ரூபாய் 3000/-, இரண்டாவது பரிசு ரூபாய் 2000/- மற்றும் 3வது பரிசாக ரூபாய் 1000/-ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மேலும் இப்போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் தூத்துக்குடி சின்னத்துரை கோ மற்றும் கண்ணாசில்க்ஸ் சார்பாக தலா ரூபாய் 500/-க்கான வெகுமதி கூப்பன்களையும் வழங்கினார். அத்துடன் இப்போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கு பெற்றமைக்காக, அவர்களை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பாராட்டுச் சான்றும் வழங்கப்பட்டது.
இந்த மாரத்தான் போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மேற்பார்வையில் தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, உதவி ஆய்வாளாகள் சக்திவேல், நங்கையர் மூர்த்தி, தலைமை காவலர்கள் ராஜா ஆகியோர் செய்திருந்தனர். இதற்கான பாதுகாப்பு பணிகளை தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், போக்குவரத்துப்பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், தென்பாகம் உதவி ஆய்வாளர் முத்துகணேஷ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜன், தனிப்பிரிவு காவலர் ஆனந்த் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் மேற்கொண்டனர்.
இந்த மாரத்தான் போட்டிக்கான நெறிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்ச்சாமி, மாவட்ட தடகள கழக செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் அருள்சகாயம், இணை செயலாளர் சத்தியா சங்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் சதீஷ் சந்திரன், லெனின் மற்றும் உடல்கல்வி ஆசிரியர், ஆசிரியைகள் ஆகியோர் கடைபிடித்தும், கண்காணித்தும் இப்போட்டியை நிறைவு செய்தனர். இதில் போட்டியில் கலந்து கொண்ட வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையாளர்களாக பங்கு பெற்றனர்.