திருநெல்வேலி – அக்-06,2021
திருநெல்வேலி மாநகர போலீஸ் துணைக்கமிஷனராக சுரேஷ்குமார் வந்த பிறகு சட்டம் ஒழுங்கு பணிகள் சுறுசுறுவென சூப்பராக நடப்பது மட்டுமின்றி பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களில் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாளையங்கோட்டை காவல் நிலைய எஸ்.ஐ அருணாச்சலம் வெளியிட்ட ஆடியோ சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘‘மூன்று மாதங்கள் நான் ஓய்வின்றி காவல் பணியில் ஈடுபட்டதால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். இதனால் எனது இதயமும் பலவீனமாக உள்ளது’’ என அவர் அதில் பேசியது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி முதல்வர் மற்றும் டிஜிபி வரை சென்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த வாரம் நெல்லைக்கு விசிட் அடித்த டிஜிபி சைலேந்திரபாபு பாளையங்கோட்டை காவல் நிலையத்தை ஆய்வு செய்தார். அருணாச்சலம் வெளியிட்ட அந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் நெல்லை மாநகரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசார் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் காவல் வட்டாரங்களில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பாக காவலர்கள் தரப்பில் காதை நீட்டிய போது அவர்கள் கூறியது அதிருப்தியாகவே இருந்தது.
‘‘கோர்ட் பணி, பந்தோபஸ்து, பாதுகாப்பு, இரவு ரோந்து என்று தொடர்ந்து ஓய்வில்லாமல் பணி செய்வதால் எங்களுக்கு சரியான தூக்கமில்லை. அதற்கு கூட நேரமில்லாமல் பணி செய்து வருகிறோம். காலையில் 8 மணிக்கெல்லாம் கண்டிப்பாக ரோல் கால் வரவேண்டும்’’ என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ரோல்காலில் கலந்து கொள்கிறோமா என்பதை கண்காணிக்க உதவி ஆணையர், கூடுதல் துணை ஆணையர் தலைமையில் தினசரி ஆய்வு செய்யப்படுகிறோம். ரோல்காலில் ஆப்சென்ட் ஆனால் துறைரீதியான நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கின்றனர்.
இந்த கெடுபிடி ரோல்கால் சிஸ்டத்தால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகிள்ளோம்’’ என குமுறித்தள்ளினர்.
காவலர்கள் அடுக்கிய இந்த குற்றச்சாட்டுக்களை நெல்லை மாநகர துணைக்கமிஷனர் சுரேஷ்குமார் முன்பு கேள்விகளாக முன்வைத்தோம். அவற்றுக்கு அவர் அளித்த விளக்கமும் நியாயமானவைகளாகவே இருந்தன.
- நெல்லை மாநகரத்தில் போலீசார் அதிகம் பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருப்பது குறித்து ?
காவல் பணி கடினமானது என்று நன்கு தெரிந்துதான் பணிக்கு வருகிறார்கள். மற்ற துறைகளை போல் காவல்துறை பணி என்பது அவ்வளவு எளிதானதல்ல. இது சட்டம் ஒழுங்கு, குற்றம் முக்கியமாக மக்களை காக்கும் பணி. சில காவலர்கள் அவர்களின் குடும்ப சூழல் காரணமாக விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆணால் அதிகம் பேர் விண்ணப்பித்திருப்பது என்பது கூறுவது தறவான தகவல்.
- பாளை எஸ்.ஐ அருணாச்சலத்தின் வேதனை ஆடியோவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளதே ?
நான் மேற்சொன்ன பதிலில் அனைத்தும் அடங்கும். எஸ்ஐ அருணாச்சல் குரல் பதிவிட்டது தவறு என்று அவரே வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழக டி.ஜ.பி அவர்களே ஆறுதல் கூறி அவரை ஊக்கபடுத்தி விட்டார். அருணாச்சலம் எஸ்ஐ முன்பை விட சிறப்பாக சுறுசுறுப்பாக காவல் பணி செய்து வருகிறார். அது முடிந்து போன விஷயம். ஊடகங்கள்தான் அந்த சம்பவத்தை பெரிதாக்குகிறீர்கள்.
ரோல்கால் சிஸ்டம் அவ்வளவு கடினமானதா ? அதனால் மன உலைச்சல் என்ற குற்றசாட்டு உள்ளதே ?
‘ரோல் கால் சிஸ்டம்’ நான் உருவாக்கியது அல்ல. அது காவல்துறை நிலைபாட்டில் (POLICE STANDING ORDER)
பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளதுதான். அதை காவலர்களின் எதிர்கால நலன் கருதி முறைப்படித்தியுள்ளேன்.
ரோல் கால் சிஸ்டம் என்பது மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆணிவேர் போன்றது. அது மட்டுமின்றி காவலர்களையும் உயர் அதிகாரிகளையும் இணைக்கும் ஒரு பாலமாக அமைவதுதான். அதுவே ரோல் காலின் நோக்கம்.
- ரோல்கால் பணியின் முக்கிய அம்சம் என்ன?
காவல்நிலையத்தில் பணியாற்றும் காவல்துறையினர் அனைவரும் ஆய்வாளர் தலைமையில் ஒன்று கூடி ஒவ்வொருவருக்கும் அன்றைய கொடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து அறிவிக்கப்படும். மேலும் அவர்கள் அந்தப் பணிகளை முறையாக நிறைவேற்றுகிறார்களா என்பதை ஆய்வாளர் ஆய்வு செய்கிறார்கள். காலையில் ரோல்காலுக்கு ஆஜர் ஆணால்தான் பணிகள் வேகமாக நடைபெறும்.
வாட்ஸ்அப்பில் அவர்களின் பணிகள் குறித்து அனுப்பப்பட்டால் அவர்கள் அந்த பணியை செய்கிறார்களா என்பது ஆய்வாளருக்கு தெரியாது. ஆய்வாளருக்கு கீழ் பணி செய்யும் எஸ்.ஐ மற்றும் காவலர்கள் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்கிறார்களா என்பதையும் ரோல்கால் சிஸ்டம் மூலம் கண்காணிக்க முடியும்.
ரோல்கால் பணியை கண்காணிக்க ஏ..டி.சி மற்றும் ஏ.சி போன்ற உயர் அதிகாரிகளை அனுப்புவது ஏன்?
காவலர்களின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கத்தில்தான் ரோல்காலில் உதவிக்கமிஷனர் அந்தஸ்த்தில் அதிகாரிகள் ஆய்வுக்கு செல்கின்றனர். காவலர்கள் அன்றாடம் செய்யும் பணிகள் குறித்து கேள்வி கேட்கும் நிகழ்வு மட்டும் ரோல்காலில் நடக்கவில்லை. காவலர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை தீர்த்து வைப்பதும் ரோல்கால் சிஷடத்தில் முக்கிய நோக்கம் ஆகும். நானும் வாரம் ஒருநாள் காவலர்களைத் தேடி செல்கிறேன். கமிஷனரும் வாரம் ஒரு நாள் ஆய்வுக்கு வந்து குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்த்து வருகிறார்.
– போலீஸ் மீடியா சிறப்பு நிருபர்