தூத்துக்குடி – அக்-02,2021
கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரை கடத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த கார் ஓட்டுனர் உட்பட 6 பேர் கைது – ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள 40 பவுன் தங்க நகைகள், ரொக்கப்பணம் ரூபாய் 6 லட்சம் பறிமுதல் – கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்த முருகேசபாண்டியன் மகன் சரவணக்குமார் (40) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது காரில் கடந்த 09.09.2021 அன்று கார் டிரைவர் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் சேதுபதி (31) என்பவருடன் திருநெல்வேலிக்கு பத்திர பதிவு செய்வதற்காக சென்றுள்ளார், அப்போது கார் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சன்னது புதுக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது, மேற்படி கார் டிரைவரான சேதுபதி காரை நிறுத்தி சிறுநீர் கழிப்பதற்காக இறங்கியுள்ளார். அப்போது 3 மர்ம நபர்கள் காருக்குள் ஏறி, கார் ஓட்டுனர் சேதுபதி மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் சரவணக்குமாரையும் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயின், 3 ½ பவுன் கைச் செயின் மற்றும் ரூபாய். 20,000/- பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு, மேற்படி சரவணக்குமார் செல்போனிலிருந்து அவரது தந்தை முருகேச பாண்டியன் என்பவருக்கு அழைத்து உங்கள் மகன் சரவணக்குமாரை கடத்தி வைத்துள்ளோம், அவர் உயிருடன் வேண்டுமென்றால் 1 கோடி பணம் வேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளனர்.
அதற்கு முருகேசபாண்டியன் தன்னிடம் 12 லட்சம் பணம் மட்டுமே இருப்பதாக கூறியுள்ளார், இருக்கிற 12 லட்சம் ரூபாயும், 50 பவுன் தங்க நகையும் கொண்டு வரவேண்டுமென்று கூறியுள்ளனர். இதனையடுத்து மேற்படி முருகேச பாண்டியன் தன்னிடம் இருந்த 12 லட்சம் பணம் மற்றும் 40 பவுன் தங்க நகைகளையும் எடுத்துகொண்டு காரில் வருவதாக சரவணக்குமார் செல்போனிற்கு பேசியுள்ளர். உடனே மேற்படி மர்ம நபர்கள் அந்த பணம் மற்றும் நகைகளை சன்னது புதுக்குடி பகுதியில் உள்ள முட்புதரில் வைத்துவிட்டு போக சொன்னதால், அவரும் அப்படியே செய்துள்ளார். அந்த சமயத்தில் அப்பகுதியில் ஏற்கனவே இருசக்கர வாகனத்தில் வந்து நின்று கொண்டிருந்த 2 மர்ம நபர்களுடன், காரில் இருந்த 3 மர்ம நபர்களும் இறங்கி முருகேச பாண்டியன் வைத்துவிட்டு சென்ற பணம் நகைகளை எடுத்து கொண்டு, சரவணக்குமாரை இது பற்றி வெளியே கூறினால் கொன்று விடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து மேற்படி சரவணக்குமார் கடந்த 30.09.2021 அன்று அளித்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் மேற்பார்வையில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில் உதவி ஆய்வாளர் அந்தோணி தீலிப், முதல் நிலை காவலர்கள் மோகன்ராஜ், கனகராஜ், காவலர்கள் சத்ரியன், பாலகிருஷ்ணன், கார்த்திக் மற்றும் கருப்பசாமி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரிகளை விரைந்து கைது செய்து, தங்க நகைகள் மற்றும் பணத்தை மீட்க உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படையினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில், மேற்படி மர்ம நபர்கள் கோவில்பட்டி காப்புலிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த செல்வம் மகன் 1) சங்கிலிபாண்டியன் (19), கோவில்பட்டி கடலையூர் ரோடு பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் 2) மாடசாமி (எ) கோபி (35), காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த மாடசாமி மகன் 3) செல்வம் (38), கோவில்பட்டி அன்னைதெரசா நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் 4) பொன்ராஜ் (33), கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த நாராயணன் மகன் 5) பொன்கார்த்திக் (24) என்பது தெரியவந்தது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சரவணக்குமாரை பற்றிய தகவல்களை கொடுத்து, சரவணக்குமாரை காரில் அழைத்து செல்வது குறித்தும், மேற்படி சம்பவ இடத்தில் சிறுநீர் கழிப்பது போன்று நிறுத்துவதாகவும், அந்த இடத்தில் 2 பேரை அங்கே தயார் நிலையில் இருக்குமாறு கூறி கொள்ளையடிப்பதற்கு திட்டங்கள் தீட்டி இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது சரவணக்குமார் என்பவரின் கார் டிரைவரான கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் 6) சேதுபதி (31) என்பதும் தெரியவந்தது. மேற்படி தனிப்படை போலீசார் எதிரிகள் 6 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சரவணக்குமாரை மிரட்டி கொள்ளையடித்துச் சென்ற ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள 40 பவுன் தங்க நகைகள், பணம் ரூபாய் 6 லட்சம் மற்றும் கொள்ளயைடித்த பணத்தில் வாங்கிய ரூபாய் 75,000/- மதிப்புள்ள இரு சக்கர வாகனம், சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 3 கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேற்படி எதிரிகளை கைது செய்து 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை மீட்ட மேற்படி தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.