தூத்துக்குடி – செப் – 10,2021
தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று கண்மாயில் குளிக்க சென்ற குழந்தைகள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டம் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருவார்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் ஜெயதனுஷ்குமார் (05) மற்றும் அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரெங்கமூர்த்தி மகன் விஷ்வகுரு (06) ஆகிய இரு குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களுடன் தினமும் அங்குள்ள கண்மாயில் குளிக்கச் சென்று வருவது வழக்கம். இன்று மதியம் மேற்படி சிறுவர்கள் தங்களது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தவர்கள், வழக்கமாக குளிக்கச் செல்வது போல தங்கள் பெற்றோர்கள் இல்லாமல் அந்த கண்மாய்க்கு குளிக்க சென்று, அங்கு ஆழமாக இருந்த இடத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு குழந்தைகளின் உடல்களை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தார். இது குறித்து அவர் கூறியதாவாது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைப்பார் ஆற்றில் இருவரும், மேல அரசரடி கண்மாயில் தனியாக குளிக்க சென்ற 2 சிறுவர்களும் மற்றும் கழுகுமலை பகுதியல் உள்ள ஓடை குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறு குழந்தைகளுக்கு எந்தப் பகுதியில் எவ்வளவு ஆழம் இருக்கும், அங்கு சென்று குளிக்கலாமா, குளிக்கக்கூடாதா போன்ற எந்த விபரமும் அறியாத குழந்தைகளை தனியாக குளிக்க அனுப்பாதீர்கள், 5 வயது, 6 வயது குழந்தைகளுக்கு என்ன தெரியும். நீர் நிலைகள் அருகில் குடியிருப்பவர்கள் தங்கள் குழந்தைகள், பெற்றோர்களுக்கு தெரியாமல் அங்கு சென்று விடாமல் பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளவேண்டியது பெற்றோர்களின் பொறுப்பாகும், இதுபோன்று நீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவம் ஏற்படும் ஒவ்வொரு முறையும் பொதுமக்கள் நீர் நிலைகள் மற்றும் ஆற்றங்கரைகளில் குளிக்கச் செல்லும் போது கவனத்துடன் இருக்குமாறு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இனிமேலாவது இது போன்ற துயரமான சம்பவங்கள் நிகழாமல் இருக்க பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்தார்.