தேனி – செப் – 30,2021
செய்தியாளர் – செல்வக்குமார்
டிஎஸ்பி தலைமையில்இரும்பு பட்டறை தொழிலாளர்களுடன் ஆலோசனை:
அரசின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி எஸ் பி எச்சரிக்கை :
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக காவல் துறைத் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின்படி, திண்டுக்கல் சரக காவல்துறை தலைவர் விஜயகுமாரி வலியுறுத்தலின் படியும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே வழிகாட்டுதலின்படி பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இரும்பு பட்டறை தொழிலான கத்தி, அருவாள், வீச்சருவாள், பட்டா கத்தி, வாள், கூர்மையான ஆயுதங்கள் செய்வோர்கள் மற்றும் இரும்பு பட்டறை உரிமையாளர்களுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் தலைமையேற்று சிறப்புரையாற்றிய முத்துக்குமார் தமிழகத்தில் பெருகி வரும் பல்வேறு முன் விரோத கொலைக் குற்ற சம்பவங்களுக்கு இரும்பினால் ஆன கத்தி, அரிவாள், வாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ரவுடிகள், கொலைக் குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும், பெருகி வரும் குற்றச் சம்பவங்களை தடுத்திடும் வகையில் விவசாய பயன்பாடு தவிர்த்து அபாயகரமான ஆயுதங்கள் செய்து விநியோகம் செய்ய கூடாது என்றும், “தாங்கள் செய்யும் ஆயுதங்கள் விவசாய பயன்பாட்டிற்காக இருக்க வேண்டுமே தவிர, கொலை செய்ய பயன்படுத்துவதாக இருந்து விடக் கூடாது” என்று கேட்டுக் கொண்டார்.அரசு வழி காட்டியுள்ள அளவுகளின் படி மட்டுமே ஆயுதங்கள் விவசாய பயன்பாடு மற்றும் குடும்ப பயன்பாட்டிற்காக சிறிய அளவிலான பொருட்கள் மட்டுமே தயார் செய்து கொடுக்க வேண்டும் எனவும், தாங்கள் தயாரிக்கும் இரும்பினால் ஆன ஆயுதங்களில் தங்களது பட்டறை முத்திரை கட்டாயம் பதித்திட வேண்டும் எனவும், தாங்களிடம் ஆயுதங்கள் வாங்க , அல்லது செய்திட வருவோரது பெயர், தேதி, நேரம் மற்றும் விலாசங்கள் அடங்கிய பதிவேடு அவசியம் கடைபிடித்திட வேண்டும் எனவும் முடிந்தவரை ஆதார் எண் மற்றும் போன் நம்பர் பெற்று பதிவேட்டில் குறிப்பிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் முறையான உரிமம் பெறாமல் இரும்புபட்டறை தொழில் செய்யக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். இரும்பு பட்டறையில் காவல்துறை எச்சரிக்கை பலகை கண்டிப்பாக வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்..அரசு காட்டிய வழிமுறைகளின்படி இரும்பு பட்டறை தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி, தென்கரை காவல் நிலைய ஆய்வாளர் சுகுமாறன், தேவதானப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர், சார்பு ஆய்வாளர்கள் ஈஸ்வரன்,ஜோதி சுப்பிரமணியன், பாண்டியராஜன், இத்திரீஸ் கான், காவல் துறையினர் , மற்றும் பெரியகுளம் வட்டாரஇரும்பு பட்டறை தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் சார்பில் இரும்பு பட்டறை தொழிலாளர்களுக்கு பதிவேடு நோட்டுகள் வழங்கப்பட்டன.