தூத்துக்குடி – செப்-04,2021
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் வ.உ.சி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தென் மண்டலம் டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் 2021 – 2022க்காக போட்டியில் கலந்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் வென்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கடந்த 28.8.2021 மற்றும் 29.08.2021 ஆகிய இரு நாட்கள திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் வ.உ.சி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தென் மண்டலம் டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் 2021 – 2022க்காக போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் 500 பேர் கலந்து கொண்டனர்.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் 22 பேரும், மாணவிகள் 19 பேரும் மேற்படி டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் வென்றுள்ளனர். அவர்கள் 41 பேரையும் இன்று மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழன்டா கலைக்கூடத் தலைவர் திரு. ஜெகஜீவன், பயிற்சியாளர் கிறிஸ்டோபர், தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.