சென்னை – செப் – 20,2021
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் இணைந்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின்படி, கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா மூன்றாவது அலை வராமல் தடுக்க, 15.09.2021 அன்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங், இ.ஆ.ப., மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., தலைமையில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், சென்னை பெருநகரின் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து, 16.09.2021 முதல் 26.09.2021 வரை சென்னை பெருநகரின் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து, தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவற்றை (Mask Enforcement Drive) பொதுமக்கள் கடைபிடிக்க வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன்பேரில், மேற்படி மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய 15 மண்டல அமலாக்க குழுவினர் (Zonal Enforcement Teams – ZETs) கடந்த 16.09.2021 முதல் சென்னையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சந்தைகள், திருமண மண்டபங்கள் மற்றும் விழா நடைபெறும் இடங்களில் தீவிரமாக கண்காணித்து, பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை வலியுறுத்தியும், முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு வார்டிலும் நிலையான சோதனை சாவடிகள் அமைத்து, இதில் 200 காவல்துறை ஆளிநர்கள் மற்றும் 1,000 தன்னார்வலர்களைக் கொண்ட ஐந்து கள ஆய்வு பணியாளர்கள் (FSW) தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் நிலையான சோதனை சாவடிகளும், 45 காவல் ஆளிநர்கள் மற்றும் 225 தன்னார்வலர்கள் இணைந்து கண்காணித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங், இ.ஆ.ப., ஆகியோர் இன்று சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான தி.நகர்- ரங்கநாதன் தெரு, மெரினா- காந்தி சிலை மற்றும் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் இரயில் நிலையம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியம் பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் முகக்கவசம் அணியாமலிருந்த பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் செந்தில்குமார், இ.கா.ப (வ), இணை ஆணையாளர்கள் நரேந்திரன் நாயர் இ.கா.ப (தெ) துரைக்குமார், இ.கா.ப (வ) ராஜேந்திரன், இ.கா.ப (கி) துணை ஆணையாளர்கள் ஹரிகரண் பிரசாத், இ.கா.ப (தி.நகர்) , திஷாமிட்டல், இ.கா.ப (மைலாப்பூர்) மகேஷ்வரன், இ.கா.ப (பூக்கடை), பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த 16.09.2021 முதல் 18.09.2021 ஆகிய 3 நாட்களில் சென்னை காவல்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி குழுவினர் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்ட தீவிர தடுப்பு சோதனையில், முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள் மீது 4,362 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் ரூ.8,72,400/- வசூலிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து, கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், கொரோனா தொற்று 3வது அலை ஏற்படாத வண்ணம் ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.