சென்னை – ஆகஸ்ட் -10,2021
வட சென்னை பகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை புது வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் பகுதிகளில் ஷேர் ஆட்டோவில் வரும் மூதாட்டிகளை குறிவைத்து அவர்களின் கவனத்தை திசை திருப்பி ஒரு கும்பல் நகைகளை திருடி வருவதாக தொடர்ந்து திருவொற்றியூர் போலீசாருக்கு புகார்கள் குவிந்தன.
குறிப்பாக பாதிக்கப்பட்ட மூதாட்டிகள் ஷேர் ஆட்டோவில் வரும்போது உடன் பயணிக்கும் இக்கும்பலைச் சேர்ந்த பெண்கள் மூதாட்டிகளிடம் கனிவாகப் பேசி உங்கள் நகை அறுந்துள்ளது கழற்றி பையில் வைத்துக் கொள்ளுங்கள் என அவர்களின் கவனத்தை திசைத் திருப்பி மூதாட்டிகள் நகைகளை பையில் வைத்தப் பின்பு யாருக்கும் தெரியாமல் பிளேடால் பையை கிழித்து நகைகளை திருடி வந்துள்ளனர்.
இச்சம்பவங்கள் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடும் பகுதிகளில் உள்ள் சி.சி.டி.வி காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இந்த தீவிர விசாரணையின் முடிவில் மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடும் கும்பல் மதுரையை சேர்ந்த கௌரி (40), சாந்தி (35) மற்றும் சின்னத்தாயி (30) ஆகியோர் என்பதை போலீசார் கண்டறிந்து அவர்களை நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 12.5 சவரன் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் காட்சிக்காக வைத்தனர் பின்னர் இவர்கள் மூவர் மீதும் சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.