திருச்சி – ஆகஸ்ட் -12,2021
அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்பட்டது. இந்நிலையில் இன்று 12.08.2021-ந் தேதி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்பண்ணை லெட்சுமிபுரத்தில் உள்ள குடோனில் விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவலர்கள் அடங்கிய குழுவினர் சோதனை செய்தனர். அச்சோதனையில் அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூபாய் பத்து இலட்சம் (ரூ.10,00,000/-) சந்தை மதிப்புள்ள 27 மூட்டைகளில் இருந்த 550 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா (Vimal, Panparag, Cool Lips & RMD) பொருட்களை பறிமுதல் செய்தும், குடோன் உரிமையாளர் திருச்சி பால்பண்ணையை சேர்ந்த ராஜேஸ் என்பவரை கைது செய்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய குற்ற எண்.523/21 u/s 273, 328 IPC & 77 of JJ Act-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ரூபாய் பத்து இலட்சம் (ரூ.10,00,000/-) சந்தை மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து குடோன் உரிமையாளரை கைது செய்த காந்திமார்க்கெட் காவல் நிலைய தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.
மேலும் திருச்சி மாநகரில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல்துறையின் மூலம் எச்சரிக்கப்படுகிறது.