தூத்துக்குடி – ஆகஸ்ட் – 23,2021
தூத்துக்குடி மாவட்டம் சக்தி விநாயகர் பள்ளி உள்விளையாட்டு அரங்கில் 75 மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து யுனிகோ வேர்ல்டு ரெகார்டு நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற பள்ளி மாணவ மாணவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.
கடந்த 15.08.2021 முதல் 18.08.2021 வரை தூத்துக்குடியில் சக்தி விநாயகர் பள்ளி உள்விளையாட்டு அரங்கில் ராஜோ பாக்சிங் & பிட்னஸ் கிளப், கிரிட்டி ஆர்ட்ஸ் & டான்ஸ் ஸ்டுடியோ மற்றும் சிகரம் ரோலர் ஸ்கேட்டிங் சார்பாக தூத்துக்குடியை சேர்ந்த 5 முதல் 18 வயது பள்ளி மாணவ மாணவிகள் 34 பேர் கலந்து கொண்டு தொடர்ந்து 75 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்த சாதனையை பாராட்டி யுனிகோ வேர்ல்டு நிறுவனம் சான்றிதழ் வழங்கி உலக சாதனையில் இடம்பெற செய்துள்ளது.
மேற்படி உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நீண்ட நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை நிகழ்த்திய சிகரம் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி நிறுவனம் சார்பாக கலந்துகொண்ட பள்ளி மாணவர்கள் தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய தலைமை காவலர் சிக்டஸ் ஜெனீவர் என்பவரது மகன் யாபேல், ஜேக்சன் ஜியோ, ஷானிஜோ, அந்தோணி ஜெப்ரீன், சுஜய் பாலா, ஸிபித் வாஷ், குரு சித்தார்த் ஆகிய 7 மாணவர்கள் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சாதனை நிகழ்த்திய மாணவர்களை பாராட்டி மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்தினார்.
இந்நிகழ்வின் போது ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி நிறுவனத்தின் பயிற்சியாளர் . ஜோசப்ராஜ் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தனர்.