சென்னை – ஆகஸ்ட் – 11,2021
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மாங்காடு பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி வந்த 2 சிறுவர்களை மடக்கிப்பிடித்த,பூந்தமல்லி காவல் நிலைய தலைமை காவலர் கோவிந்தராஜ் மற்றும் ஊர்காவல் படை வீரர் அய்யமுத்து ஆகியோரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
கடந்த 29.07.2021 அன்று அதிகாலை பூந்தமல்லி காவல் நிலைய தலைமைக் காவலர் கோவிந்தராஜ் மற்றும் ஊர்காவல் படை வீரர் அய்யமுத்து ஆகியோர் பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், ஸ்ரீநகர் பகுதியில் ரோந்து பணியிலிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்கள் போலீசாரை கண்டதும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பினர். சுதாரித்து கொண்ட மேற்படி போலீசார் இருவரையும் இருசக்கர வாகனத்தில் துரத்திச்சென்று மடக்கிப்பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் இருவரும் மாங்காடு பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி வந்தது தெரியவந்ததின் பேரில் இருவரையும் மாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாங்காடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 16 வயது மற்றும் 17 வயதுடைய இளஞ்சிறார்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.
இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த, பூந்தமல்லி காவல் நிலைய தலைமைக் காவலர் கோவிந்தராஜ் மற்றும் ஊர்காவல் படை வீரர் அய்யமுத்து ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.