தூத்துக்குடி – ஆகஸ்ட் – 21,2021
தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு சமூக வலைதளங்களில் நடைபெறும் சைபர் குற்றங்கள் குறித்து ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு சமூக வலைதளங்களில் நடக்கும் சைபர் குற்றங்கள் பற்றியும், அதில் என்னென்ன வழிகளில் அந்த குற்றங்களை கண்டுபிடிக்கலாம், எவ்வாறு நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பயிற்சியளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் சைபர் குற்றப்பிரிவு காவல்துணை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 8 உட்கோட்டங்களில் தூத்துக்குடி நகரம், தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய 4 உட்கோட்டங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு இந்த பயிற்சி முகாம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.
இந்த முகாமில் முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், டெலிகிராம், சிக்னல் போன்ற சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்களை எவ்வாறு கண்டறிவது மற்றும் சைபர் குற்றங்கள் குறித்த சட்டங்கள் மற்றும் விதிகள் குறித்தும் சிறப்பு பயிற்சியளிக்கப்படுகிறது. இதில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், சைபர் குற்றப்பிரிவு மற்றும் தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் உட்பட சைபர் குற்றப்பிரிவினர் பலர் கலந்து கொண்டு பயிற்சியளித்தனர்.