கோயம்புத்தூர் – ஆகஸ்ட் – 19,2021
கோவையில் தலிபான் ஆதரவு நபர்களின் சமூகவலைதள கணக்குகளை என்.ஐ.ஏ., மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவினர் உன்னிப்பாக கண்காணிக்க துவங்கியுள்ளனர்.
தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியதை இந்தியாவில் சிலர் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்திலும் தலிபான்களுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களை பதிவு செய்து வருவதாக தமிழக உளவுத்துறை, மத்திய உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் குறிப்பிட்ட, ஐந்து வலைதள கணக்குகளை உளவுத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
கோவையிலும் ஒரு சிலரின் சமூகவலைதள பதிவுகளை சிறப்பு நுண்ணறிவு பிரிவினர் மற்றும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.
கோவையில் ஏற்கனவே ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையிட்டு லேப்டாப், சி.டி., கைப்பற்றினர்.
கேரளா, கனகமலை பகுதியில், 6 ஐ.எஸ்., ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கோவையில் சோதனையிட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
கோவையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறுகையில், ‘கேரளா மற்றும் கோவையில் ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனால், தற்போது கோவை மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் உள்ள நபர்களின் சமூகவலைதள கணக்குகள், அவர்களின் கருத்துக்கள், இவர்கள் யாரை பின்தொடர்கிறார்களா போன்ற தகவல்கள் திரட்டப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.
சட்டவிரோத கருத்துக்களை யார் பதிவு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே கோவையில் ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்வதாக, 15க்கும் மேற்பட்டோரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளனர்.