தூத்துக்குடி – ஆகஸ்ட்-29,2021
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து (Storming Operation) – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேற்று மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை செய்யவும், தங்கும் விடுதிகளில் குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும்படி நபர்கள் தங்கியுள்ளனரா என சோதனையிடவும், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், வங்கிகள், ஏடிஎம் மையங்கள், நிதி நிறுவனங்கள், நகைக்கடைகள் உட்பட முக்கிய இடங்களை கண்காணிக்கவும், பழைய ரவுடிகளை தணிக்கை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்தல் போன்ற பல்வேறு தீவிர ரோந்துப் பணிகளை (Storming Operation) மேற்கொள்ள மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 95 தங்கும் விடுதிகள் சோதனையிடப்பட்டும், வாகன சோதனையில் 2000 வாகனங்கள் சோதனையிடப்பட்டு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 22 பேர் உட்பட மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக 1650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பழைய குற்றவாளிகள் 55 பேர் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகள் 72 பேர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களின் தற்போதைய இருப்பிடம் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் தணிக்கை செய்ய்பட்டுள்ளது, மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஏடிஎம் மையங்கள், நகைக்கடைகள் உட்பட 370 முக்கிய இடங்களை கண்காணிக்கப்பட்டுள்ளது. இது தவிர 13 ரவுடிகள் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 109 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் உட்பட சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 30 பேர் கைது செய்யப்பட்டு 376 மதுபாட்டில்களும், 250 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகள் உட்பட பழைய வழக்குகளில் கைதாகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளான முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான அகரத்தைச் சேர்ந்த பத்திரகாளி மகன் 1) இசக்கிமுத்து (22), புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த காமாட்சி மகன் 2) அய்யாச்சாமி (53), புதுக்கோட்டை காவல் நிலையத்தில் நடுக்கூட்டுடன் காட்டைச் சேர்ந்த லெட்சுமணப்பெருமாள் மகன் 3) நாகராஜ் (23), அதே பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் 4) பாரதி (20) உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.