சென்னை – ஆகஸ்ட் -25,2021
கோட்டூரபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி தப்பிச்சென்ற குற்றவாளியை மடக்கிப் பிடித்து, கைது செய்த ரோந்து காவலர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, கோட்டூர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பொன்னியம்மன் கோவில் தெருவில் பெட்டிக்கடை நடத்தி வரும் அசாரூதின் (வ/22) என்பவர் கடந்த 13.08.2021 அன்று இரவு தனது இருசக்கர வாகனத்தை கடையின் முன்பு நிறுத்தி வைத்து விட்டு கடைக்குள் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் மேற்படி அசாரூதினின் இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு தப்பியுள்ளார். அசாரூதின் உடனே அருகில் பணியிலிருந்த கோட்டூர்புரம் காவல் நிலைய ரோந்து வாகன ஓட்டுநர்/காவலர் சதீஷ் என்பவரிடம் கூறியுள்ளார். உடனே காவலர் சதீஷ் விரைந்து செயல்பட்டு மேற்படி சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறியுள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறை போலீசார் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அபிராமபுரம் காவல் நிலைய ரோந்து வாகனத்தில் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் ரோந்து வாகன ஓட்டுநர்/காவலர் பிரபாகரன் ஆகிய இருவரும் காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் வி.க.நகர் பாலம் அருகே கண்காணிப்பு பணியிலிருந்த போது, மேற்படி இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு ஓட்டி வந்த சுரேஷ் (வ/42), கள்ளக்குறிச்சி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு இருக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.