தூத்துக்குடி – ஆகஸ்ட் – 01,2021
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் 3வது அலை தடுப்பு விழிப்புணர்வு விளம்பர பலகையை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, துப்புரவு பணியாளர்கள், ஏழைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசிப்பை மற்றும் கபசுரக்குடிநீர் வழங்கினார்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் புறக்காவல் நிலையத்தில் 3 இடங்களில் கொரோனா தொற்று பரவல் 3வது அலையை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பலகை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த கொரோனா விழிப்புணர்வு விளம்பர பலகையை இன்று தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து விழிப்புணர்வு உரையாற்றினார்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் துப்பரவுபணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் 80 பேருக்கு அரிசிப்பை வழங்கினார். பின் பொதுமக்கள் மற்றும் பேரூந்துகளில் பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், பேரூந்து, ஆட்டோ உட்பட பல வாகனங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டியும் இந்த விழிப்புணர்வை துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 3ம் அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பக்கத்து மாநிலங்களில் கொரோனா 3ம் அலை பரவத் தொடங்கியுள்ளது, அதனால் நம் மாநிலத்திலும் பரவக்கூடும் என்பதால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து 7ம் தேதி வரைக்கும் 7 நாட்கள் பொதுமக்களிடையே கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி நகரத்தில் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா 3ம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு துண்டு பிரசுரம், சுவரொட்டி மற்றும் ஆட்டோ பேரணி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல்துறை மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இது ஆடி மாதம் என்பதால் கோவில்களில் பொதுவாக கூட்டம் அதிகமாக கூடும், அதிலும் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டினம் மிகப் பெரிய புண்ணியஸ்தலமாக இருப்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதனால் ஆகஸ்;ட் 1, 2, 3 மற்றும் ஆடி அமாவாசை நாளான ஆகஸ்ட் 8ம் தேதி ஆகிய 4 நாட்களிலும் மேற்படி கோவில்களில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே போன்று தூத்துக்குடி நகரத்தில் பனிமயமாதா கோவிலிலும் பொதுமக்கள் பங்களிப்பின்றி கடந்த ஜூலை 25ம் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. மேலும் ஆடி அமாவாசை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள கடற்கரைகள் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள் குளிப்பதற்கோ, கூடுவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் கொரோனா 3ம் அலையை தடுப்பதற்கு அரசுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும்,
அனைவரும் கட்டாயமாக முககவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், பொதுமக்கள் தேவை இல்லாமல் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும், கைகளை நன்கு சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், இருமும்போதும், தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை கைகுட்டை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்க்க வேண்டும், பேருந்துகளில் கூட்டமாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும், அரசு விதிமுறைகளை உறுதியாக பின்பற்றி கொரோனா 3வது அலை பரவுவதை தவிர்ப்போம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ், உதவி ஆய்வாளர்கள் முருகப்பெருமாள், தனிப்பிரிவு ஞானராஜ், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் சுனைமுருகன் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.