சென்னை – ஆகஸ்ட் – 12,2021
தமிழகத்தைச் சேர்ந்த 8 இன்ஸ்பெக்டர்களுக்கு சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சர் விருது வழங்கி
மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு சிறந்த புலனாய்வுக்கான விருது மத்திய அரசால்
வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் இந்தியா முழுவதும் ஆந்திரா, கர்நாடகா, அஸ்ஸாம், பீகார், லடாக், உத்தரபிரதேசம், மேகாலயா, மணிப்பூர், கோவா, குஜராத், சட்டீஸ்கர், தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட 30 மாநிலங்களில் பணிபுரியும் 152 அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சரின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் சிபிஐ, போதைப்பொருள் தடுப்பு கண்காணிப்பு பிரிவு, தேசிய புலனாய்வுப்பிரிவு ஆகியவையும் அடங்கும். இந்த 152 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் சரவணன் (நாகப்பட்டினம் சிபிசிஐடி), அன்பரசி (திருவண்ணாமலை, அனைத்து மகளிர் காவல் நிலையம்), கவிதா (கடலுார், புதுச்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்), ஜெயவேல் (திருவள்ளூர், வெங்கல், காவல் நிலையம்), கலைச்செல்வி (திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம்), மணிவண்ணன் (சென்னை நகர கிழக்கு மண்டல நுண்ணறிவுப்பிரிவு) சிதம்பர முருகேசன் (குரோம்பேட்டை காவல்நிலையம்) மற்றும் கண்மணி (கன்னியாகுமரி சிறப்புப்பிரிவு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் மணிவண்ணன் சென்னை நகர கிழக்கு மண்டல நுண்ணறிவுப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இன்ஸ்பெக்டர் மணிவண்ணன்
இவர் 1998ம் ஆண்டு முதல் 2011 வரை க்யூ பிரிவில் பணியில் இருந்த போது, தமிழ் தேசிய மீட்புப்படையை சேர்ந்த (TNRT) சத்தியமூர்த்தி என்பவரை கைது செய்யவும், அவரிடமிருந்து 9MM துப்பாக்கியை கைப்பற்றவும், உதவியாக இருந்துள்ளார். தமிழ்நாடு விடுதலை படை தலைவர் (TNLA) மாறன் என்பவரை கைது செய்துள்ளார். விடுதலை புலிகள் இயக்கத்தினரை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து, உயரதிகாரிகளின் நன் மதிப்பை பெற்றார். 2011 – -2013 குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வு துறையில் (CBCID- Crime) பணியில் இருந்த போது Video Piracy Manual தயார் செய்து, தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2014 முதல்2017 வரை திருவல்லிக்கேணி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக இருந்த போது ஆதாய கொலை வழக்கில் சிறந்த முறையில் துப்பு துலக்கியதற்காக கிழக்கு மண்டலத்தில் மிக சிறந்த சட்டம் ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் குற்ற வழக்கில் இருவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்
தண்டனை பெற்றுத் தந்தார். பாண்டிபஜார் காவல் நிலைய வழக்கில் மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்திற்கு சென்று அங்கு குற்றவாளியை கைது செய்து களவு போன சொத்துக்கள் அனைத்தையும் கைப்பற்றியுள்ளார்.
இரண்டாவது முறையாக 2020 ஆண்டு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணி
புரிந்தபோது, கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டு, அரசு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்த காவலர்களுக்கும்,
பொதுமக்களுக்கும் இவர் செய்த உதவிகள் குறிப்பிடத்தக்கது.